
செண்பகம்- இப்ப எங்க இருக்குண்ணு தெரியல…
பாக்கணும்னுஆசையாஇருக்கு ஆனா
அதுக்கு காரணமே இல்ல
நான் அப்ப ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன்..என்னோட சிநேகிதன் சிவா புது சட்டைலாம் எடுத்திருக்காங்கனு ரொம்ப சந்தோசமா இருந்தான்,
ஸ்கூல்க்கு லீவுல்லாம் போட்டான், அவங்க வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சிட்டிருந்தாங்க,தெருவுல சிவா சித்தப்பா குமரேசன் கல்யாணம்ணு பேசிக்கிட்டாங்க அப்புறம் அவனும் சொன்னான்,
பக்கத்து வீட்டு தங்கம்மா கெழுவி யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்திச்சி “அவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறான்”
எதிர்லயிருந்த பொம்பள குரலு “எல்லாம் வரவ சொல்லிக்கொடுப்பா”ண்ணு சொல்லிச்சு,
எனக்கு ஒண்ணும் புரியல ஆனா எதோன்னு மட்டும் தோணிச்சி
அந்த நொடியில குமரேசன் ஒல்லியான உடம்போட பஜார் டீ கடை ஸ்டால்ல நின்னு இருமிக்கிட்டே டீ ஆத்துற உருவம் என் கண்னு முன்னாடி வந்துபோச்சி, அவரு அப்பப்ப சளிய வேற துப்பிக்கிட்டே இருப்பாரு.
தெருவே கல்யாணத்துக்கு போய்ட்டு வந்துச்சி.
மதியானமா புது பொண்ண ஊருக்கு கூப்பிட்டு வந்தாங்க,
எனக்கு அவங்கள பாக்கணும்ணு ஆசையா இருந்திச்சி..என் சிநேகிதன் சிவாவ பாக்கவே முடியல.
ஒரு வாரத்துக்கப்புறம் சிவாவ பாக்க அவங்க வீட்டுக்கு போயிருந்தப்பதான் முதமுதலா அவங்கள பார்த்தேன்.
முகம் வட்டமா இருந்துச்சி,சிரிச்சப்ப ரெண்டு கன்னத்துலயும் குழிவிழுந்திச்சி, குழிவிழுந்தா ராசின்னு சொல்றத நெனச்சுகிட்டேன்,
உத்துப்பாத்தா ஒரு கண்ணு மட்டும் சின்னதா மாறு கண்ணா இருந்திச்சி அது கூட ராசின்னு சொல்லுவாங்க, தல முடி நீளமா இருந்திச்சி
ரொம்ப உயரம்னு சொல்ல முடியாது ஆனா உயரம், கோயில்ல இருக்கற செப்பு பொம்பள சாமி உடம்பு மாதிரி இருந்துச்சி அவங்க உடம்பு
அவங்கள பாக்கும் போது எனக்கு வெட்கமா இருந்துச்சி
எனக்கு அவங்க ஜாங்கிரி கொடுத்தாங்க நான் வெக்கப்பட்டுட்டு வேணாம்னு சொன்னேன், அதுக்கு அவங்க நீ இத சாப்பிட்டாதான் உங்க வீட்டுக்கு வருவேண்ணு சொன்னாங்க ஆனாலும் நான் சாப்பிடல….
அதுக்கப்புறம் நான் பத்தாவது போனேன். சிவா பெயிலாயிட்டதால அவங்கப்பா அவன மெக்கானிக் ஷெட்ல சேத்துவிட்டுட்டாரு. எனக்கும் அவனுக்கும் பாத்துக்க நேரம் இல்லாம போயிடிச்சி, எனக்கும் ஸ்கூல்ல வேற ப்ரண்டுங்க ஆயிட்டாங்க, எப்பவாச்சும் பாத்துக்குவோம் ஆனா அவன் அதிகம் பேசமாட்டான் மெக்கானிக் ஷெட்டுக்கு போன வருத்தம்னு நினைக்கிறேன். பத்தாவதுன்றதால நானும் ஸ்கூல்,டியுசன்,வீடுன்னு முடங்கிட்டேன்.
வீட்ல படிச்சிட்டிருக்கறப்ப பொம்பளைங்கல்லாம் கும்பலா உக்காந்து பேசிக்கறது கேக்கும். ஊர்ல இருக்கற எல்லார் கதையும் பேசுவாங்க ஆனா பெரும்பாலும் நல்லவிதமாவே யாரையும் பேசமாட்டாங்க,பேசற பொம்பளைங்கள்ல யாரும் அவ்வளவு சீக்கரம் எழுந்து போகமாட்டாங்க, ஏண்ணா போன பின்னாடி அவங்கள பத்தி பேசுவாங்கன்ற பயம்தான்,
ரகசியமா பேசும்போது காத்து மட்டும் வரா மாதிரி பேசுவாங்க அது அவங்களுக்கு மட்டும்தான் புரியும் நான் அடிக்கடி கேக்கறதால எனக்கும் புரியும்,அது மாதிரிதான் செண்பகம் பத்தி பேசறதும் எனக்கு அப்பப்ப கேட்கும்.
பதார்த்த கடை வையாபுரிக்கும் அவளுக்கும் தப்பான தொடர்பு இருக்கறதாவும்,கத்திரிக்கா வாங்கிட்டு காசு கொடுக்காம எல்லாம் கணக்குதாண்ணு சொல்லிட்டு வர்றதாவும் பேசிகிட்டாங்க…
பத்தாவது பாசாயி ப்ளஸ் ஒண் சேந்துட்டேன் அப்ப ஒரு நாள் சிவா வீட்ல அவங்க பாட்டி சத்தமா யாரையோ திட்டிட்டு இருந்துச்சு, பதார்த்த கடை வேற மூடி இருந்திச்சு…என் ப்ரண்டுங்க செண்பகமும் பதார்த்த கடகாரனும் அவ ஊரு திருவிழாக்கு போனப்ப கழனியில கட்டிபிடிச்சிட்டிருந்தத யாரோ பாத்து சொல்லிட்டாங்களாம்ணு சொன்னாங்க,நான் சிவாட்ட கேட்டதுக்கு அவங்க குடும்ப மானத்த வாங்கறதுக்கிண்ணே வந்து சேந்திருக்குனு திட்டினான்.
அர மணி நேரம் கழிச்சி தெருவுல குமரேசன் எப்பவும் வேலைக்கு போராமாதிரிதான் போயிட்டிருந்தாரு,அப்புறம் பதார்த்தகடயும் தொறந்திருந்திச்சி,செண்பகமும் முன்னமாதிரியே இருந்தாங்க.
ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தன் குமரேசனுக்கு உடம்பு சரியில்ல வேலைக்கு போவாம வீட்லயே இருந்தாரு செண்பகம்தான் தனக்கு பொறந்த ஒரு பையனையும் ,பொண்ணையும்,குமரேசனையும்காப்பாத்தணுமேண்ணு கொளுத்து வேலைக்கு போயிட்டிருந்திச்சு. மேஸ்திரிக்கும் செண்பகத்துக்கும் மேட்டர்னு பேசிகிட்டாங்க…எங்கம்மாட்ட கடன் வாங்குறதுக்காவ செண்பகம் எங்கவீட்டுக்கு வந்திருந்தாங்க,காசு கொடுத்துட்டு பொறுமையா பேசிட்டிருந்த எங்கம்மா நான் வந்ததும் செண்பகத்த அனுப்பறதுலயே குறியா இருந்தாங்க..
நான் காலேஜ் படிகறதுக்கு சென்னை வந்துட்டேன்.
ஊருக்கு போயிருந்தப்ப குமரேசன் செத்துட்டார்ணு சொன்னாங்க, எங்கம்மா ’பிரியோஜனமே இல்லண்ணாலும் பேருக்கு புருஷன்னு இருந்தா அந்த பொண்ணுக்கு ஆதரவா இருந்திருக்கும்னு’ சொன்னாங்க
காலேஜ் பைனல் இயர் பொங்கலுக்கு ஊருக்கு போயிருந்தப்ப
சிவா வீட்லந்து செண்பகத்த தொரத்திட்டதா சொன்னாங்க புருசன் செத்து எட்டு மாசத்துக்கு அப்புறம் நாலு மாசம் கருவ வயித்துல சொமந்துட்டிருந்தாங்களாம்.
பொறந்த வீட்லயும் சேக்கலையாம் , பையன மட்டும் இங்க வீட்டுட்டு பொண்ண மட்டும் கூட்டிட்டு எங்கயோ போயிட்டாங்களாம்.
எனக்கு அந்த பொண்ண இங்கய விட்டுட்டு போயிருக்கலான்ம்ணு தோணுச்சி ….ஆனா அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது சிவாவோட கல்யாணம் ஆன அண்ணன் தான் அந்த கர்பத்துக்கு காரணமாம்.
எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சே குமரேசன் எதுக்கு கல்யாணம் பண்ணணும்?வந்தவள தேவிடியானு சொல்லணும்? எனக்கு அப்பப்ப தோண்ற கேள்வி இது.
இப்ப செண்பகம் எங்க இருக்குன்னு தெரியல…
பாக்கணும்ணு ஆசையா இருக்கு
ஆனா அதுக்கு காரணமே இல்ல
ரொம்ப அழகான எளிமையான நடை. இயல்பான எழுத்து. நீங்க நிறைய பதிவு செய்யனும்...
ReplyDeleteநன்றி ரவி
ReplyDelete